மேற்குவங்கத்தின் கோல்கட்டாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் பெண் பயிற்சி டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. டாக்டர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் நீதி கேட்டு சாலையில் நின்று போராடும் நிலை ஏற்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கனவே மேற்குவங்க அரசு குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் மவுனம் சாதித்து வருகிறது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில், இன்று(செப்.,08) ஆளும் திரிணமுல் கட்சி ராஜ்யசபா எம்.பி., ஜவஹர் சர்கார் மாநில அரசின் செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்து பதவியை ராஜினாமா செய்தார். முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: ஊழல் அதிகாரிகள் அரசு மருத்துவமனைகளில் உயர் பதவிகளை பெறுவதை என்னால் ஏற்று கொள்ள முடியாது. மேற்குவங்க அரசு மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது. எனது அனுபவத்தில் இது போன்ற சம்பவத்தை நான் பார்த்தது இல்லை.
ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் நடந்த பயங்கரமான சம்பவத்தில் இருந்து ஒரு மாதம் காலமாக நான் பொறுமையாக இருந்தேன். மருத்துவ மாணவர்கள் போராட்டம் நடத்தினர். மம்தாவின் பழைய பாணியில் அவர் நேரடி தலையீட்டு நடவடிக்கை எடுப்பார் எதிர்பார்த்தேன். அது நடக்கவில்லை. அரசு தாமதமாக தான் நடவடிக்கை எடுக்கிறது. இது தொடர்பாக முதல்வர் மம்தா பானர்ஜி உடன் தனிப்பட்ட முறையில் பேச முயற்சி செய்தேன். அதுவும் நடக்கவில்லை. 3 ஆண்டுகளாக மேற்குவங்க மாநில மக்கள் பிரச்னைகள் குறித்து பார்லிமென்டில் எழுப்ப நீங்கள் எனக்கு அளித்த வாய்ப்பிற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். விரைவில் டில்லி சென்று ராஜ்யசபா தலைவரிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கிவிட்டு, அரசியலில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.