தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம், பூக்கார தெரு ஆகிய இடங்களில் பூச்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு திண்டுக்கல், ஓசூர், நிலக்கோட்டை, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும்.
இங்கிருந்தும் வியாபாரிகள் மொத்தமாக பூக்கள் வாங்கி விற்பனைக்காக கொண்டு செல்வர். ஏராளமான பொதுமக்களும் தங்கள் தேவைக்கேற்ப பூக்கள் வாங்கி செல்வர். முகூர்த்த நாட்கள், பண்டிகை காலங்களில் பூக்களின் தேவை வழக்கத்தை விட அதிகம் இருப்பதால் அந்த சமயங்களில் பூக்களின் விலை உயர்ந்து காணப்படும்.
தற்போது ஆவணி மாதம் என்பதால் அடுத்தடுத்து சுபமுகூர்த்த நாட்கள், வரும் சனிக்கிழமை விநாயகர் சதுர்த்தி என்பதால் பூக்களின் தேவையும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.450-க்கு விற்ற மல்லிகைப்பூ விலை உயர்ந்து கிலோ ரூ.750 முதல் 1000 வரை விற்கப்படுகிறது. கனகாம்பரம் பூ கிடுகிடுவென உயர்ந்து கிலோ ரூ.1000-க்கு விற்பனையாகி வருகிறது. இதேபோல் முல்லை கிலோ ரூ.750 முதல் ரூ.1000, சம்பங்கி ரூ.300, அரளி ரூ.200, ஆப்பிள் ரோஸ் ரூ.250-க்கும் விற்பனை செய்யப்பட்டது