தஞ்சை அருகே திருவையாறு பைபாஸ் சாலையில் ஸ்கூட்டியில் சென்ற பெண்ணை பைக்கில் பின் தொடர்ந்து வந்து நாலு பவுன் தங்கச் செயினை அறுத்துச் சென்ற மர்ம நபர்கள் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் திருமானூரை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவரது மனைவி மனோசித்ரா (38). இவர் நேற்று முன்தினம் மாலை தஞ்சை அருகே உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் படிக்கும் தனது மகளை பார்ப்பதற்காக வீட்டில் இருந்து ஸ்கூட்டியில் புறப்பட்டார்.
பின்னர் தஞ்சைக்கு வந்து தனது மகளை பார்த்துவிட்டு வீட்டிற்கு ஸ்கூட்டியில் புறப்பட்டார். தஞ்சை – திருவையாறு பைபாஸ் பகுதியில் ஒரு வாகன ஷோரூம் எதிரில் மனோ சித்ரா ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு பைக்கில் பின் தொடர்ந்து வந்த இரண்டு மர்ம நபர்கள் வெகு வேகமாக மனோ சித்ரா கழுத்தில் அணிந்திருந்த நாலு பவுன் தங்கச் சங்கிலியை பறித்துகொண்டு அங்கிருந்து தப்பினர். இதனால் அதிர்ச்சி அடைந்த மனோசித்ரா சட்டென்று சுதாரித்துக் கொண்டு தனது ஸ்கூட்டியில் அந்த மர்ம நபர்களை விரட்டி பிடிக்க முயற்சி செய்தார்.
ஆனால் அந்த மர்ம நபர்கள் பைக்கில் மிக வேகமாக சென்றுவிட்டனர். இது குறித்து மனோ சித்ரா தமிழ் பல்கலைக்கழக போலீசில் புகார் செய்தார் . இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.