ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. கடந்த 4-ந் தேதி மாரடைப்பால் திடீரென மரணம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 500 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 500 கட்டுப்பாட்டு கருவிகள், 500 வி.வி. பேட் எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த எந்திரங்கள் சரியாக இயங்குகிறதா? ஏதேனும் பழுது ஏற்பட்டுள்ளதா? என்பதை சரி பார்க்கும் பணி கடந்த 5 நாட்களாக ஆர்.டி.ஓ. அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரக் கிடங்கில் நடந்து வந்தது. நேற்று மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனை மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான கிருஷ்ணனுண்ணி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து சித்தோட்டில் உள்ள ஐ.ஆர்.டி. பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், வசதிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஈரோடு கிழக்கு தொகுதியில் ஓட்டுப்பதிவு நேரத்தை, கொரோனா பரவல் இல்லாததால் மாற்றி அமைப்பது குறித்து, தேர்தல் ஆணையத்துக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் கடிதம் அனுப்பி உள்ளார்.
கடந்த தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் 350 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. தற்போது இடைத்தேர்தலில் கிழக்கு தொகுதியில் 238 ஓட்டுச்சாவடிகளாக குறைக்கப்பட்டுள்ளது. ஒரு ஓட்டுச்சாவடியில் அதிகப்பட்சமாக 1,400 வாக்காளர்கள் வரை ஓட்டுப்பதிவு செய்ய உள்ளனர். அத்துடன் விரைவான ஓட்டுப்பதிவுக்காக, கொரோனா பரவலுக்கு முன்பு இருந்ததுபோல காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டும் ஓட்டுப்பதிவு நேரத்தை அனுமதிக்க கோரி மாவட்ட தேர்தல் அலுவலர் சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளார். தேர்தல் ஆணையம் விரைவில் இதற்கான அறிவிப்பை வெளியிடும் என தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு ஒரு மணி நேரம் குறைகிறது.