தஞ்சை மாதாகோட்டை அன்னை தெரசா தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் ( 43). மினி லாரி டிரைவர். இவரது மனைவி திலகவதி. நேற்று செந்தில்குமார் தனது மனைவி திலகவதியுடன் பாபநாசம் அருகே உள்ள கபிஸ்தலத்தில் உறவினர் வீட்டு மஞ்சள் நீராட்டு விழாவுக்கு பைக்கில் சென்றார். விழா முடிந்த பின்னர் கணவன்- மனைவி இருவரும் தங்கள் வீட்டிற்கு பைக்கில் புறப்பட்டனர்.
கும்பகோணம் -தஞ்சாவூர் புதிய பைபாஸ் ரோடு குருங்களூர் வெண்ணாறு பாலத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அதி வேகமாக மற்றொரு பைக்கில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் திடீரென செந்தில்குமார் பைக்கை வழிமறித்து நிறுத்தினர். இதனால் அதிர்ச்சி அடைந்த செந்தில்குமார் தனது பைக்கை பிரேக் போட்டு நிறுத்தினார். தொடர்ந்து கண்ணிமைக்கும் நேரத்தில் செந்தில்குமாரை கீழே தள்ளிவிட்டு அவரை அந்த மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டினர்.
இதில் செந்தில்குமார் பலத்த காயம் அடைந்தார். கணவரை அறிவாளால் வெட்டுவதை கண்ட திலகவதி கத்தி கூச்சல் போட்டுள்ளார். உடன் அந்த மர்ம நபர்கள் திலகவதியின் கழுத்தில் அணிந்திருந்த ஆறரை பவுன் தங்க செயினை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதற்கிடையில் திலகவதியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். தொடர்ந்து படுகாயம் அடைந்த நிலையில் துபுதுடித்துக் கொண்டிருந்த செந்தில்குமாரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு செந்தில்குமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்த புகாரின் பேரில் தஞ்சை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.