தஞ்சாவூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக பழங்கால சிலையை கடத்தப்படுவதாக சிலைகடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே மேலதிருவிழா பட்டியில் வழியே வந்த காரை காவல்துறையினர் சோதனை செய்தனர். அதில் பழங்கால 2.5 அடி உயர உலோகப் பெருமாள் சிலையை மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து காரில் இருந்த சென்னையை சேர்ந்த ராஜேந்திரன் (52), கும்பகோணத்தை சேர்ந்த ராஜ்குமார் (36), திருவாரூரை சேர்ந்த தினேஷ் (28) ஜெய்சங்கர் (58), கடலூரை சேர்ந்த விஜய் (28), திருவிடைமருதுாரை சேர்ந்த ஹாரிஸ் (26), காட்டுமன்னார்குடியை சேர்ந்த அஜித்குமார் (26) ஆகிய ஏழு பேரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் தினேஷின் தந்தை 12 ஆண்டுகளுக்கு முன் தொழுவூர் ஆற்றில் துார்வாரும் பணியில் ஈடுபட்ட போது, சிலை கிடைத்துள்ளதும், இது குறித்து வருவாய் துறையினரிடம் தகவல் அளிக்காமல், தனது மாட்டு கொட்டகையில் மறைத்து வைத்து இருந்துள்ளார். இதையடுத்து தினேஷ் அவரது தந்தைக்கு பிறகு மாட்டுகொட்டகையில் மறைத்து வைத்து இருந்த சிலையை கண்டெடுத்துள்ளார்.
அவரும், வருவாய்துறையினரிடம் தெரிவிக்காமல் சிலையை விற்பனை செய்ய தினேஷ் திட்டமிட்டுள்ளார். இதில் தனது நண்பர்கள் மூலம் சென்னையை சேர்ந்த ராஜேந்திரன் உதவியை நாடியுள்ளார். பிறகு தினேஷ் தனது நண்பர்களுடன் சிலை விற்பனை செய்வதற்காக கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் 7 பேரையும் கைது செய்து சிலையை பறிமுதல் செய்தனர். இந்த சிலையானது 15 முதல் 16ம் நுாற்றாண்டை சேர்ந்த சோழர்கள் காலத்து சிலையாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்