வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் 45 வயதான பெண் ஒருவர். தற்போது தஞ்சையில் வசித்து வரும் அவர், தஞ்சையில் உள்ள தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியையாக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தனது செல்போனில் முகநூல் பயன்படுத்தினார். அப்போது அதில் ஆன்லைன் பங்கு சந்தையில் பணத்தை முதலீடு செய்து அதிக லாபம் பெறலாம் என விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது.
மேலும், அந்த விளம்பரத்திற்கு கீழே பங்குசந்தையில் சேருவதற்கான லிங்கும் கொடுக்கப்பட்டிருந்தது. அதை கிளிக் செய்தபோது, அது நேரிடையாக மற்றொரு சமூக வலைத்தளமான வாட்ஸ்-அப்- குரூப்பிற்கு சென்றது.அந்த குரூப்பில் தன்னை இணைத்துக்கொண்ட அவருக்கு, அதில் இருந்த நபர்கள் தங்களுக்கு பங்குச்சந்தையில் பணத்தை முதலீடு செய்வதனால் இரட்டிப்பு லாபத்தொகை கிடைப்பதாக ஆசைவார்த்தை கூறியுள்ளனர்.
இதனை உண்மை என நம்பிய அரசு பள்ளி ஆசிரியை, பங்குச்சந்தையில் பணத்தை முதலீடு செய்ய ஒப்புக்கொண்டார். இதற்கிடையே அவருக்கு வாட்ஸ்-அப் குரூப்பில் இருந்த நபர்கள் ஒரு லிங்க் அனுப்பி அதில் வரும் பங்குசந்தை செயலியை பதிவிறக்கம் செய்ய நிபந்தனை விதித்தனர். இதையடுத்து அந்த லிங்க் மூலமாக செயலியை பதிவிறக்கம் செய்தார்.
பின்னர், அந்த செயலியின் வழியாக பங்குச்சந்தையில் பணத்தை முதலீடு செய்த அவர், முதலில் ரூ.2 லட்சம் அனுப்பிய நிலையில், அவருக்கு ரூ.4 லட்சம் கிடைத்தாக செயலியில் வரவு வந்தது.இதனால் மகிழ்ச்சி அடைந்த அவர், மீண்டும் ரூ.5 லட்சம் அனுப்பிய நிலையில் அவருக்கு ரூ.10 லட்சம் கிடைத்ததாக செயலியில் அறிவிப்பு வந்தது. இப்படியாக கடந்த ஜூன் மாதம் வரை பல்வேறு பரிவர்த்தனைகளாக ரூ.13 லட்சத்து 71 ஆயிரத்து 100 வரை அனுப்பியுள்ளார்.
இதையடுத்து தனது வங்கியில் பணத்தை மாற்றுவதற்கு, சம்பந்தப்பட்ட நபர்களிடம் கேட்டார். அப்போது மறுமுனையில் பேசிய மர்மநபர்கள் அரசிற்கு வருமான வரி செலுத்தினால் மட்டுமே தங்களுடைய வங்கிக்கணக்கிற்கு பணத்தை மாற்றலாம் என கூறி குரூப்பில் இருந்து வெளியேறி விட்டனர்.
இதனால், அதிர்ச்சியடைந்த அவர் வாட்ஸ்-அப் குரூப்பில் இருந்த நபர்களை தொடர் கொள்ள முயன்றபோது, அவர்களது செல்போன் சுவிட்ச் – ஆப் என வந்துள்ளது. இதனால், குரூப்பில் இருந்த நபர்கள் போலியான நபர்கள் என்பதும், அவர்கள் அனுப்பிய பங்குசந்தை செயலியும் போலியானதும் என்பதும் தெரியவந்தது. அப்போதுதான் தனக்கு மோசடி நடந்துள்ளதை அரசு பள்ளி ஆசிரியை உணர்ந்தார். இது குறித்து தஞ்சை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் அவர் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
