Skip to content
Home » ஒலிம்பிக் போட்டி நாளை தொடக்கம்…….10ஆயிரம் வீரர்கள் பாரீசில் குவிந்தனர்

ஒலிம்பிக் போட்டி நாளை தொடக்கம்…….10ஆயிரம் வீரர்கள் பாரீசில் குவிந்தனர்

33வது  ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர்  பாரிஸில்  நாளை  தொடங்குகிறது.  இந்திய நேரப்படி நாளை மாலை 6.30 மணிக்கு போட்டிகள் தொடங்குகிறது.பாரீசில் ஒலிம்பிக் போட்டி நடப்பது இது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.  போட்டிகள் ஆகஸ்ட் 11ம் தேதி்வரை நடக்கிறது.

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் 4 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது.  மொத்தம் 17 நாட்கள் நடைபெற உள்ளது. 32 விளையாட்டுக்களில் 329 பிரிவுகளில் போட்டிகள் நடக்கிறது. இதில் 200 நாடுகளில் இருந்து 10 ,500க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் கலந்துகொள்கி்றனர். இந்தியாவின் சார்பில் 117 வீரர், வீராங்கனைகள் களம் இறங்க உள்ளனர். இவர்களில் 24 பேர் ராணுவம் உள்ளிட்ட ஆயுதப்படையை சேர்ந்தவர்கள். இவர்களில் 2 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த முறை நடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் 121 வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற நிலையில் இந்த முறை எண்ணிக்கையில் 4 குறைந்துள்ளது. 117 வீரர்கள், 140 துணை பணியாளர்கள்  பாரீஸ் சென்றுள்ளனர். அதிகபட்சமாக தடகளத்தில் 29 பேர் பங்கேற்கின்றனர். துப்பாக்கி சுடுதலில் 21, டேபிள் டென்னிஸ் 8, பேட்மிண்டன் 7, வில்வித்தை, குத்துச்சண்டை, மல்யுத்தத்தில் தலா 6பேர் களம் காண்கின்றனர். கடந்த முறை இந்தியா ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 7 பதக்கம் கைப்பற்றியது.

இதுதான் ஒலிம்பிக் வரலாற்றில் ஒரு  போட்டியில் இந்தியா பெற்ற அதிக பதக்கமாகும். ஆனால் இந்தமுறை அதைவிட அதிக பதக்கம் வெல்லும் வாய்ப்பு உள்ளது.பாரீஸ் ஒலிம்பிக்கில் மொத்தம் 16 போட்டிகளில் 117 பேர் பங்கேற்க உள்ள நிலையில் அவர்களின் பயிற்சிக்காக இந்திய அரசு ரூ.470 கோடி வழங்கியது.

 ஏற்கனவே இங்கு 1900 ல் பிரான்ஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 24 நாடுகளைச் சேர்ந்த 997 வீரர்கள் கலந்துகொண்டனர். 1924ல் இரண்டாவது முறை பிரான்ஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 44 நாடுகளைச் சேர்ந்த 3,089 விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டனர்.  நாளை தொடங்கும்  ஒலிம்பிக் போட்டியில் 10,500 விளையாட்டு வீரர்கள் கலந்துகொள்கின்றனர். இந்த முறை 4 புதிய விளையாட்டுகள் ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டுள்ளன.

 ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா  நாளை  நடைபெறுகிறது. ஒலிம்பிக் வரலாற்றில் முதன்முறையாக ஒரு மைதானத்தில் விழாவை நடத்தாமல், பாரிஸின் முக்கியமான சீன் நதிக் கரையில் நடைபெற இருக்கிறது.  வீரர்கள் படகுகளில்  சீன் நதியில் அணிவகுப்பார்கள். 6 கி.மீ. தொலைவுக்கு நடைபெறும்  இந்த அணிவகுப்பை ஆற்றின் கரைகளில் இருந்து பார்வையாளர்கள் கண்டுகளிப்பர்.

 இந்த  ஒலிம்பிக் போட்டி அணிவகுப்பில் இரு நாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்துக் கொண்டிருப்பதால், ரஷ்யாவும் அதை ஆதரிக்கும் பெலாரஸ் வீரர்களும் அந்த நாட்டுக் கொடிகளுடன் ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாது. நடுநிலைக் கொடியின் கீழ் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் முழக்கம் Games Wide Open. இது தனித்தன்மை, பரந்த மனப்பான்மை, அணுகுதல் ஆகியவற்றின் மூலம் பாரிஸ் விளையாட்டைக் காணவும் விளையாடவும் அனைவரையும் வரவேற்கிறது.

 பாரிஸ் ஒலிம்பிக்கின் சின்னம் ஃபிரீஜ் (Phryge). பிரெஞ்சு சிவப்புத் தொப்பியைக் குறிக்கிறது.வேகம், உயரம், வலிமை’ என்பது ஒலிம்பிக்கின் குறிக்கோள்.

 ஒலிம்பிக் வரலாற்றிலேயே கோடைக்கால ஒலிம்பிக் போட்டிக்கும் அடுத்து நடக்க இருக்கும் பாரா ஒலிம்பிக் போட்டிக்கும் ஒரே சின்னம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

 பாரிஸ் போட்டிக்கான முத்திரை, பிரெஞ்சு ஒலிம்பிக் வரலாற்றின் 3 முக்கியமான விஷயங்களைக் குறிக்கிறது. ஒலிம்பிக் சுடர், பதக்கம், மரீயன். இவற்றில் மரீயன், பிரெஞ்சுப் புரட்சியில் போரிட்ட வீராங்கனை. அதாவது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய பிரான்ஸின் கொள்கையைப் பிரதிபலிப்பதாக அமைக்கப்பட்டிருக்கிறது.

 1912ம் ஆண்டு வரை முதலிடம் பெறும் பதக்கங்கள் முழுமையான தங்கத்தால் செய்யப்பட்டன. இப்போது 6 கிராம் தங்க முலாம் பூசப்பட்ட இரும்பால் பதக்கங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

 2024 பாரிஸ் ஒலிம்பிக் பதக்கங்கள் மராமத்துப் பணியின்போது ஈஃபில் கோபுரத்திலிருந்து எடுக்கப்பட்ட பழைய இரும்பால் செய்யப்பட்டுள்ளன.

அதிகாரப்பூர்வ தொடக்க விழா நாளை மாலை நடைபெறுகிறது என்ற போதிலும் போட்டிகள் நேற்று தொடங்கியது.  கால்பந்து, வில்வித்தை போன்ற போட்டிகள் 2 தினங்களாக நடந்து வருகிறது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!