Skip to content
Home » ஒலிம்பிக் ….. தொடர் ஓட்டம்….. திருச்சி வீராங்கனை சுபாவும் பங்கேற்கிறார்

ஒலிம்பிக் ….. தொடர் ஓட்டம்….. திருச்சி வீராங்கனை சுபாவும் பங்கேற்கிறார்

  • by Senthil

பிரான்ஸ் தலைநகர் பாரிசில்  ஒலிம்பிக் போட்டி  வரும் 26ம் தேதி தொடங்குகிறது.  இந்தியாவில் இருந்து வீரர், வீராங்கனைகள் பாரீஸ் சென்றுள்ளனர்.  இந்த போட்டியில் திருச்சியில் இருந்து ஓட்டப்பந்தய வீராங்கனை சுபாவும் சென்ற உள்ளார். அவர் தங்கப்பதக்கம் பெற , திருச்சி மாவட்ட தடகள சங்கம்,  மக்கள் சக்தி இயக்கம்   வாழ்த்தி வழியனுப்பியது. இது தொடர்பாக  மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே. சி. நீலமேகம், திருச்சி மாவட்ட தடகள சங்க செயலாளர் டி. ராஜூ ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

உடல் வலிமைமிக்க ஐரோப்பியர்கள், மனவலிமை மிக்க அமெரிக்கர்கள், உடல் வலிமையும் மனவலிமையும் ஒருங்கே பெற்ற சீனா, ஜப்பான், கொரியா நாடுகளின் விளையாட்டு வீரர்களின் கடுமையான போட்டிகளுக்கு மத்தியில், இந்திய வீரர்கள் சாதிப்பது என்பது மிகப்பெரிய சவால். ஆனாலும், கடந்த 10 ஆண்டுகளாக ஆசிய விளையாட்டு போட்டிகள், காமன்வெல்த் போட்டிகள், உலக தடகளப் போட்டிகள் உள்ளிட்ட உலகத்தரமான போட்டிகளில் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடி, இந்தியாவுக்கு பதக்கங்களை குவித்துள்ளனர்.

இந்திய விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு சர்வதேச பயிற்சி யாளர்கள் மூலம் பயிற்சி அளிக்க மத்திய விளையாட்டுத் துறையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

எனவே, இப்போதைய ஒலிம்பிக் போட்டியில் தடகளம், துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், வில் வித்தை போன்ற பிரிவுகளில் இந்திய வீரர்கள் சிறந்து விளங்கி, பதக்கங்களை வென்று சாதனை படைக்க வாழ்த்துவோம்.

மேலும் தமிழகத்தில் இருந்து முதன் முறையாக 12 பேர் பங்கேற்க உள்ளனர். உலகளவில் நடந்த தகுதிச் சுற்றுகளில் சாதித்த அஜந்தா, சத்யன் (டேபிள் டென்னிஸ்), பிரவீன் (டிரிபிள் ஜம்ப்), ஆல்ட்ரின் (நீளம் தாண்டுதல்), சந்தோஷ், ராஜேஷ், சுபா, வித்யா (4×400 மீ., ஓட்டம்), விஷ்ணு, நேத்ரா (படகு), பிரித்விராஜ் (துப்பாக்கி சுடுதல்), ஸ்ரீராம் (டென்னிஸ்) இப்பட்டியலில் உள்ளனர்.

இதில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூரைச் சேர்ந்த தடகள வீராங்கனை சுபா வெங்கடேசன் எளிமையான குடும்பத்தில் பிறந்தது தனது தொடர் முயற்சியால் இந்த அளவிற்கு உயர்ந்துள்ளார்.
கடந்த முறை அவர் பதக்கம் பெற இயலாமல் போனது. ஆனால் இந்த முறை தொடர் முயற்சிகளும் , உழைப்பாலும் , தமிழக முதல்வர் தந்த ஊக்கம் மற்றும் பயிற்சியாளர்கள் அளித்த பயிற்சியாளும் பதக்கம் வெல்ல உறுதுணையாக இருக்கும்.

அவர் இந்தியாவிற்கு தமிழகத்திற்கும் குறிப்பாக திருச்சி மாவட்டத்திற்கும் பெருமை சேர்க்கும் வகையில் அவர் தனது பங்களிப்பை வெளிப்படுத்தி , பதக்கத்துடன் தாயகம் திரும்ப வேண்டும் என திருச்சி மாவட்ட தடகள சங்கம், மக்கள் சக்தி இயக்கம் மற்றும் திருச்சி மாவட்ட பொதுமக்கள் சார்பாக வாழ்த்துகிறோம் .

இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!