Skip to content
Home » டிரம்ப் மீது நடந்த துப்பாக்கி சூடு….. ஈரான் தூண்டுதலா?

டிரம்ப் மீது நடந்த துப்பாக்கி சூடு….. ஈரான் தூண்டுதலா?

  • by Senthil

அமெரிக்காவில் வருகிற நவம்பரில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, ஆளும் ஜனநாயக கட்சியை சேர்ந்த அதிபர் ஜோ பைடன், குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், பொதுமக்களை சந்தித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த சனிக்கிழமை, அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தின் பட்லர் பகுதியில் நடந்த பேரணியில் டிரம்ப் பங்கேற்றார். அப்போது, டிரம்ப் மீது துப்பாக்கி சூடுநடத்திய நபர் சுட்டு கொல்லப்பட்டார். அவர், தாமஸ் குரூக் என்ற 20 வயது இளைஞர் என பின்னர் அடையாளம் காணப்பட்டார்.

இந்த தாக்குதலுக்கு பின், அமெரிக்க உளவு பிரிவினர் அவரை மேடையில் இருந்து உடனடியாக பாதுகாப்பாக வாகனத்தில் அழைத்து சென்றனர். இந்நிலையில், டிரம்பை கொலை செய்வதற்கு  ஈரான் நாட்டில் சதி திட்டம் தீட்டப்பட்டு உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்து உள்ளது.

ஈரான் நாட்டின் குத்சு படையின் தலைவராக இருந்தவர் காசிம் சுலைமானி. இவர், கடந்த 2020-ம் ஆண்டில் ஆளில்லா விமானம் கொண்டு நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டார்.இதனை தொடர்ந்து, அப்போது அமெரிக்க அதிபராக இருந்த டிரம்ப் மற்றும் முன்னாள் வெளியுறவு செயலாளர் மைக் பாம்பியோ உள்ளிட்டோருக்கு ஈரானில் இருந்து கொலை மிரட்டல்கள் விடப்பட்டன.  எனவே  துப்பாக்கி சூடு நடத்திய  இளைஞனை ஈரான் ஏவிவிட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது. எனினும், டிரம்ப் மீது கடந்த சனிக்கிழமை நடந்த கொலை முயற்சிக்கும், ஈரான் சதி திட்டத்திற்கும் இதுவரையில் எந்தவித தொடர்பும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஈரான் நாட்டிடம் இருந்து டிரம்புக்கு எதிராக தொடர்ந்து அச்சுறுத்தல்கள் வருகின்றன என வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் பெண் செய்தி தொடர்பாளர் ஏத்ரியன் வாட்சன் கூறினார்.

இதுபற்றி ஐ.நா.வில் உள்ள ஈரான் தூதரகம் கூறும்போது, இது மிகைப்படுத்தப்பட்டது மற்றும் கெட்ட நோக்கம் கொண்டது என தெரிவித்ததுடன், டிரம்ப் குற்றம் புரிந்த நபர் என்றும் அவர் சட்டப்படி விசாரிக்கப்பட்டு, கோர்ட்டில் அவருக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தது.

இந்த நிலையில்  டிரம்ப் மீண்டும் பிரசாரத்தை தொடங்கி விட்டார்.  குண்டு பாய்ந்த அவரது காதில்  பேண்டேஜ் போடப்பட்டு இருந்தது.  துப்பாக்கி சூட்டில் உயிர்தப்பிய டிரம்ப்க்கு இப்போது மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி உள்ளது.  அவர் மக்களைப்பார்த்து கையசைத்தார். மக்களும் பதிலுக்கு கையசைத்து ஆரவாரம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!