திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ரூ 45 லட்சம் மதிப்புள்ள கழிவு நீர் அகற்றும் வாகனம் வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை லால்குடி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, பெரம்பலூர் எம்பி அருண்நேரு மற்றும் நகராட்சி தலைவர், அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு லால்குடி எம்எல்ஏ சௌந்தரபாண்டியனுக்கு அழைப்பு இல்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் அமைச்சர் நேருவின் பேஸ்புக் பக்கத்தில் இந்த நிகழ்ச்சி தொடர்பான செய்தி மற்றும் படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டது.
இந்த பேஸ்புக் பக்கத்தில் லால்குடி எம்எல்ஏ சௌந்தரபாண்டியன் ஒரு கோரிக்கை ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ” மாண்புமிகு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் அவர்களுக்கு பணிவான வேண்டுகோள். 11-10-2021 அன்று நான் தங்களிடம் லால்குடி நகராட்சிக்கு பாதாள சாக்கடை திட்டம் வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன் என்பதனை தங்களின் நினைவுக்கு கொண்டு வருகிறேன். நிறைவேற்றி தருவீர்களா?” என குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே தனது தொகுதிக்குட்பட்ட நிகழ்ச்சிக்கு அழைக்கப்படாததற்கு லால்குடி எம்எல்ஏ சௌந்தரபாண்டியன் அமைச்சரின் பேஸ்புக் பக்கத்தில் லால்குடி எம்எல்ஏ இறந்து விட்டதால் தொகுதி காலியாக உள்ளது என கமெண்ட் பதிவிட்டிருந்தார். இன்று ஏற்கனவே கடந்த 2021ம் ஆண்டு அமைச்சரிடம் கொடுத்த கோரிக்கையை நினைவுபடுத்தும் வகையில் மற்றொரு பதிவு போட்டுள்ளார். இந்த விவகாரம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.