Skip to content
Home » ரூ 30 லட்சம் தருவதாக கூறி ஆட்டோ டிரைவரிடம் `கிட்னி’ பறிப்பு..

ரூ 30 லட்சம் தருவதாக கூறி ஆட்டோ டிரைவரிடம் `கிட்னி’ பறிப்பு..

ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மதுபாபு (31). இவருக்கு மனைவி மற்றும் 4 வயதில் குழந்தை உள்ளது. ஆட்டோ ஓட்டுவதில் போதிய வருமானம் கிடைக்காததால் குடும்பம் நடத்த முடியாமல் சிரமப்பட்டு வந்தார். இதனால் ஆன்லைன் மூலம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் அந்த கடனை அடைக்க முடியாமல் தவித்துள்ளார். இந்தநிலையில் பேஸ்புக் மூலம் அதே பகுதியை சேர்ந்த பாஷா (40) அறிமுகமானார். அவரிடம் மதுபாபு, தனது குடும்ப வறுமையை குறித்து கூறியபோது பாஷா, ஒரு கிட்னியை தானமாக கொடுத்தால் ரூ 30 லட்சம் வரை வாங்கி தருகிறேன்’ என்றார். அதற்கு மதுபாபு சம்மதம் தெரிவித்தார். பாஷா மூலம் இடைத்தரகர் வெங்கட் (35) என்பவர் அறிமுகம் ஆனார். இதன்பின் விஜயவாடாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மதுபாபுவை பாஷா மற்றும் வெங்கட் ஆகியோர் அழைத்துச்சென்றனர். அங்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் கிட்னி தேவைப்படும் நோயாளியின் உறவினரை அறிமுகம் செய்து வைத்தனர். நோயாளியின் உறவினர் முன்பணமாக மதுபாபுவிடம் ரூ 60 ஆயிரம் கொடுத்துள்ளார். மீதம் ரூ29.40 லட்சத்தை ஆபரேஷன் முடிந்ததும் தருவதாக கூறியுள்ளார். கடந்த மாதம் ஜூன் 15ம் தேதி மதுபாபுவுக்கு அறுவை சிகிச்சை நடந்தது. அவரது வலது கிட்னி அகற்றப்பட்டது. முன்னதாக அவரிடம் இடது கிட்னியை அகற்றுவதாக கூறிய நிலையில் வலது கிட்னியை அகற்றியுள்ளனர். மயக்கம் தெளிந்த நிலையில் இதையறிந்து மதுபாபு அதிர்ச்சியடைந்தார். ஒப்பந்தப்படி ₹29.40 லட்சத்தை பாஷா உள்ளிட்டோரிடம் கேட்டார். அப்போது அவர்கள், `டிஸ்சார்ஜ் ஆகி சென்றபிறகு உங்கள் வீட்டுக்கு வந்து மீதி பணத்தை தருகிறோம்’ என்று கூறியுள்ளனர். ஆனால் பலமுறை கேட்டபிறகு சிறிது சிறிதாக மேலும் ₹50 ஆயிரம் கொடுத்தார்களாம். மீதி பணத்தை கேட்டபோது தர மறுத்துள்ளனர். அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனைக்கு மதுபாபு சென்றுள்ளார். அங்கிருந்த பாஷா, வெங்கட் மற்றும் டாக்டர் சரத்பாபு ஆகியோரிடம் கேட்டதற்கு அவர்கள் அலட்சியமாக பதில் கூறியதோடு, `உனது கிட்னியை எடுக்க தெரிந்த எங்களுக்கு, உனது உயிரை எடுப்பது பெரிய விஷயமே இல்லை’ எனக்கூறி விரட்டிவிட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மதுபாபு, குண்டூர் எஸ்பி ஆபீசில் புகார் கொடுத்தார்.

அதில், ‘’தன்னைப்போல் அதே மருத்துவமனையில் 10க்கும் மேற்பட்டோரை வரவழைத்து கிட்னியை அகற்றி சில ஆயிரம் மட்டுமே கொடுத்து விரட்டுகின்றனர். எனவே டாக்டர், இடைத்தரகர் உள்ளிட்ட அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்று தெரிவித்திருந்தார். இதன்படி பாஷா, வெங்கட், டாக்டர் சரத்பாபு மற்றும் நோயாளியின் உறவினர் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!