தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது.
இதில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம் கல்விக் கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 605 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்கள். இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் உத்தரவிட்டார்.
மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தலா ரூ.96,011 மதிப்பிலான இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் 6 நபர்களுக்கும். தாட்கோ சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம் வழங்கும் திட்டத்தின் கீழ் திருமதி.சசிகலா என்பவருக்கு தாட்கோ மானியம் விடுவித்த ஆணையினையும் வழங்கினார்.
கூட்டத்தில் உதவி கலெக்டர் (பயிற்சி) உத்கர்ஷ் குமார், தாட்கோ மாவட்ட மேலாளர் ரெங்கராஜன், தனித் துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சங்கர், உதவி ஆணையர் (கலால்) ரவிச்சந்திரன் மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.