தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் திட்டமான உங்களைத்தோடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின்படி கலெக்டர்கள் மாதத்தில் ஒரு நாள் வெளியூர்களில் தங்கி இருந்து அந்த பகுதி மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்படி புதுகை கலெக்டர் மெர்சி ரம்யா, விராலிமலை ஒன்றியம் ராஜகிரி சென்றார். அங்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களின் காலை உணவு திட்டத்திற்கு உணவு தயாரிக்கும் கூடத்திற்கு சென்ற கலெக்டர், அங்குள்ள சமையலர்களிடம் உணவின் தரம் குறித்து விசாரித்தார். உணவை தரமாகவும், சுகாதாரமான முறையிலும் தயாரித்து வழங்கவேண்டும் என அறிவுரை வழங்கினார்.
அந்த கிராமத்தில் உள்ள ரேசன் கடைக்கு சென்ற கலெக்டர் அங்கு உணவு பொருட்கள் அனைத்தும் இருப்பு உள்ளதா, கணக்குகள் சரியாக உள்ளதா என ஆய்வு நடத்தினார். பின்னர் வடுகப்பட்டி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கும் சென்று மாணவிகளிடம் கற்றல், கற்பித்தல் திறன் குறித்து கேள்விகள் கேட்டு ஆய்வு நடத்தினார். கலைஞர் கனவு இல்லத் திட்ட பயனாளிகள் வீட்டுக்கும் சென்று ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது இலுப்பூர் கோட்டாட்சியர் தெய்வநாயகி, தனித் தாசில்தார் ஷோபா மற்றும் பலர் உடனிருந்தனர்.
புதுக்கோட்டை கம்பன் நகரில் வடிகால் வாய்க்கால்களில் நீர் தேங்காமல் வடிகிறதா என்பதையும் கலெக்டர் ஆய்வு செய்தார். அங்கு வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது நகராட்சி பொறியாளர் முகமது இப்ராகிம் உடனிருந்தார்.