சென்னை போயஸ்கார்டனில் சசிகலா இன்று நிருபர்களிடம் கூறியதாவது… அதிமுக முடிந்துவிட்டது என்று நினைக்க வேண்டாம். அதிமுகவில் என்னுடைய தொடக்கம் ஆரம்பித்துவிட்டது. அதிமுகவில் ஜாதி பார்க்கப்படுவதாக முதன்முதலாக கேள்விப்படுகிறேன். அதிமுகவில் இருந்துகொண்டு அவ்வாறு செய்வதை தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஜாதி பார்க்காமல் பழகக்கூடியவர் ஜெயலலிதா. அப்படி ஜாதி பார்த்திருந்தால் என்னுடன் பழகியிருக்கவே மாட்டார். ஒரு சிலரின் சுயநலத்தால் அதிமுக வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. தற்போது இருக்கும் தலைவர்கள் ஜாதி அரசியல் செய்து வருகின்றனர். இந்தியாவின் 3வது பெரிய இயக்கமாக அதிமுகவை உருவாக்கினோம். ஆனால் இன்றைக்கு அதிமுக தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. கட்சியில் இருந்து யாரையும் நீக்கக்கூடாது என்பதில் எம்.ஜி.ஆர். கவனமாக இருப்பார். விரைவில் நான் சுற்றுப்பயணம் மேற்கொள்ள போகிறேன். பட்டி தொட்டியெல்லாம் போய் மக்களிடம் நான் கேட்க போகிறேன். இந்த திமுகவின் சலசலப்பை எல்லாம் கேட்க போகிறேன். திமுகவின் இந்த கோரப்பிடியில் இருந்து தமிழ்நாட்டை காக்க வேண்டும் என்றால், நான் வந்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம். என்னுடைய ஒரு கண் தொண்டர்கள். இன்னொரு கண் தமிழ்நாட்டு மக்கள். இதனால் தான் என்ன சலசலப்பு வந்தாலும் என்னுடைய பார்வை நேர்க்கோடாக தான் இருக்கும். ஒன்னும் கவலைப்படாதீங்க.. நம் தமிழ்நாட்டு மக்களுக்கும், அம்மா விட்டு சென்ற போது சில விஷயம் செய்ய வேண்டும் என்று சொன்னதையும் நான் செய்யவேண்டும் என்பதை தான் நினைத்துக் கொண்டிருகிறேன். இப்போதும் சரி.. எப்போதும் சரி.. 40 வருஷம் மக்களுக்காக வாழ்ந்திருக்கேன். மீதி உள்ள காலம், இனியும் மக்களுக்காக நான் இருப்பேன். 2026ல் தனி தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சியமைப்பது உறுதி இவ்வாறு அவர் கூறினார்.