காரைக்கால் மாவட்டத்திலிருந்து சட்டத்திற்கு புறம்பாக மது பாட்டில்கள் மற்றும் தடை செய்யப்பட்ட சாராயம் கடத்தி வந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா உத்தரவின் பேரில் சாராய கடத்தலை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு போலீசாருக்கு காரைக்காலில் இருந்து காரில் பாண்டி சாராயம் கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. தனிப்படை போலீசார் செம்பனார்கோவில் காளகஸ்தினாதபுரம் பெட்ரோல் பங்க் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதிவேகமாக வந்த காரை நிறுத்தியபோது கார் நிற்காமல் சென்றது. போலீசார் காரை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். காரை நிறுத்திய டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மேலும் போலீசார் காரை சோதனை செய்ததில் 18 சாக்குமூட்டைகளில் 900 லிட்டர் பாண்டி சாராயத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது. உடனடியாக கார் மற்றும் காரில் இருந்த சாரயத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் காரில் இருந்த மற்றொரு நபரையும் தப்பி ஓடிய நபரையும் விரட்டி பிடித்து மயிலாடுதுறை மதுவிலக்கு பிரிவு காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
விசாரணையில் சாராயம் கடத்தியவர்கள் ஆயப்பாடியை சேர்ந்த டிரைவர் சுமன்(24), திருக்களாச்சேரியை சேர்ந்த முருகேசன்(30) ஆகிய இருவரும் காரைக்காலில் இருந்து மயிலாடுதுறைக்கு சாரயத்தை கடத்தி வந்தவுடன் சாராய வியாபாரி தங்களை தொடர்பு கொண்டு சாராயத்தை பெற்று செல்வார் என்று தெரிவித்தனர். மேலும் விசாரணையில் மணக்குடியை சேர்ந்த பாண்டியன் மகன் செல்வம் (48) என்பவரை கைது செய்தனர். இது தொடர்பாக அவர்கள்மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
![](https://www.etamilnews.com/wp-content/uploads/2024/06/drinks-smakling-930x620.jpg)