டில்லி அரசின் மதுபான கொள்கை ஊழலில் தொடர்புடைய பண மோசடி வழக்கில், ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த மார்ச் 21ல் கைது செய்யப்பட்டார். ஒரு மாதத்துக்கும் மேல் திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவருக்கு, லோக்சபா தேர்தலில் பிரசாரம் செய்வதற்காக, ஜூன் 1 வரை இடைக்கால ஜாமின் வழங்கி இருந்தது. இதையடுத்து, உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமின் முடிவடைந்ததை அடுத்து, கெஜ்ரிவால் ஜூன் 2ம் தேதி திஹார் சிறையில் சரணடைந்தார். இதற்கிடையே, மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டி உள்ளதால், இடைக்கால ஜாமினை மேலும் ஏழு நாட்களுக்கு நீட்டிக்கும்படி, சிறப்பு நீதிமன்றத்தில், கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று (ஜூன் 05) விசாரணைக்கு வந்தது. கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்தது. கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் ஜூன் 19ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.