அரியலூர் மாவட்டத்தில்வாக்கு எண்ணிக்கை மையத்தில் பணியில் இருந்த பெண் கிராம உதவியாளர் உடல்நிலை பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையமான தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்லூரியில், இருப்பு அறையில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால் அந்த மையத்தில், காவல்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் நேற்று ஆயத்த பணிகளை செய்தனர்.
இதில் வெண்மான் கொண்டான் கிழக்கு வருவாய் கிராமத்தில், கிராம உதவியாளராக இருக்கும் ராஜேஸ்வரி என்பவரும், வாக்கு எண்ணிக்கை மையத்தில் பணியாற்றினார். பணியின் போது நேற்று இரவு உடல்நிலை பாதிக்கப்பட்ட ராஜேஸ்வரியை, உடன் பணியாற்றிய அலுவலர்கள், அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த நிலையில், சிகிச்சை பலனின்றி ராஜேஸ்வரி உயிரிழந்தார். இது குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து, ராஜேஸ்வரி உடலை மீட்டு அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.