பெண் போலீசார் குறித்து அவதூறு பேசிய வழக்கில் கைதான சவுக்கு சங்கர், தேனியில் அவர் தங்கியிருந்த அறை மற்றும் காரில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அவர் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் 2 நாள் காவலில் விசாரிக்க மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து, தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி போலீசார் சவுக்கு சங்கரிடம் 2 நாட்களாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பழனிசெட்டிபட்டி போலீஸ் ஸ்டேஷனில் நடத்தப்படும் இந்த விசாரணை குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘கைது செய்த நாளன்று எதற்காக தேனி மாவட்டத்திற்கு வந்தீர்கள்’ என கேட்டதற்கு மூணாறு செல்வதற்காக வந்ததாகவும், வரும் வழியில் தேனியில் தங்கியதாகவும் சங்கர் கூறியுள்ளார். ‘தேனிக்கு வரும் முன்னர் எங்கே இருந்தீர்கள்? என்கிற கேள்விக்கு தூத்துக்குடியில் இருந்தேன்’ என சவுக்கு சங்கர் பதில் கூறியுள்ளார், இதற்கு முன்பு தேனி மாவட்டத்திற்கு எத்தனை முறை வந்துள்ளீர்கள் என போலீசார் கேட்ட கேள்விக்கு, 4 முறை தேனி மாவட்டத்திற்கு வந்துள்ளதாக கூறியுள்ளார். ‘உங்களுக்கு கஞ்சா பழக்கம் உள்ளதா’ எனக் கேட்டபோது, ‘எனக்கு கஞ்சா பழக்கம் இல்லை. என்னுடைய டிரைவர், உதவியாளர் ஏன் அப்படி கூறினர் என்று தெரியவில்லை’ என்று பதில் அளித்துள்ளார். கஞ்சா இருந்தது எப்படி என கேட்டபோது, எனக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார். அமலாக்கத்துறையினருடன் தொடர்பு இருக்கிறதா என கேட்கப்பட்டுள்ளது. அதற்கு ‘தமிழக அதிகாரிகள் சிலருடன் நட்பு இருப்பதாகவும், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் தொடர்பு இருப்பதாகவும்’ சவுக்கு சங்கர் பதில் அளித்துள்ளார். ‘செலவுக்கு எங்கிருந்து பணம் வருகிறது’ என கேட்கப்பட்டதற்கு, அரசியல்வாதிகள், தகவல் தருபவர்கள் தனக்கு உதவி செய்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். உதவும் பிரமுகர்கள் என்கிற கேள்விக்கு பல பிரமுகர்களின் பெயரை சவுக்கு சங்கர் போலீசாரிடம் கூறியுள்ளார். மேலும் ஏராளமான கேள்விகளுக்கு தனக்கு தெரியாது என பதிலளித்துள்ளதாக கூறப்படுகிறது. தேனியில் எந்தெந்த தொழிலதிபர்கள் பண உதவி செய்தார்கள் என பல்வேறு கேள்விகளைகேட்டு போலீசார் பதிவு செய்து வருகின்றனர். விசாரணை முடிந்து சங்கரை இன்று மதியம் மதுரை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்துகின்றனர்.