திருச்சி அடுத்த சிறுகனூர் காவல் நிலையத்தில் 2006ம் ஆண்டு போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தவர் எஸ். செல்வராஜ். அப்போது நடந்த உள்ளாட்சி தேர்தலில் அந்த பகுதியில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக சிறுகனூர் போலீசார் விசாரணை நடத்திவந்தனர்.
அப்போது அந்த வழக்கில் சமரசம் செய்து வைக்க ஒருதரப்பினரிடம் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம். பின்னர் ரூ.6 ஆயிரம் தருவதாக ஒப்புக்கொண்டனர். அதன்படி 2.11.2006 அன்று பணத்தை கொடுத்தபோது, அப்போதைய திருச்சி லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி அம்பிகாபதி தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் போலீஸ் நிலையம் சென்று, லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் செல்வராஜை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. சுமார் 17 வருடங்களாக நடந்து வந்த இந்த வழக்கில் இன்று நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பு அளித்தார். அதன்படி , லஞ்சம் பெற்ற இன்ஸ்பெக்டர் செல்வராஜூக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார்.