ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். ஜம்முவின் தவி நகர் பாலத்தில் இன்று காலை 7.30 மணியளவில் வந்த லாரியை மறித்து பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர். அப்போது, லாரிக்குள் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு தப்பியோட முயற்சித்தனர். இதையடுத்து, லாரியை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே சில மணி நேரம் துப்பாக்கிசண்டை நடைபெற்றது. இந்த மோதலில் பாதுகாப்பு படையினர் நடத்திய பதிலடி தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். லாரியை ஒட்டி வந்த டிரைவர் தப்பியோடிவிட்டார். அவரை தேடும் பணியை பாதுகாப்பு படையினர் துரிதப்படுத்தியுள்ளனர்.
