தஞ்சாவூரில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், விவசாய தொழிலாளர்களைப் பாதுகாக்க வறட்சி பாதித்த பகுதியாக அறிவித்து, நிவாரண நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பயிர் காப்பீடு செய்த அனைவருக்கும் இழப்பீடு வழங்க வேண்டும். ஊதியத்தை தாமதமின்றி வழங்க வேண்டும் என்பன உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசு கார்ப்பரேட் சார்பு ஆட்சி நடத்துவது, விவசாயிகள், தொழிலாளர்கள், பொதுமக்களுக்கு எதிரான கொள்கைகளைக் கடைப்பிடிப்பதைக் கண்டித்தும் ஜனவரி 26ம் தேதி குடியரசு தின நிகழ்ச்சிகள் முடிவடைந்த பிறகு தஞ்சாவூரில் டிராக்டர்கள் பேரணி நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.வி. கண்ணன் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க தெற்கு மாவட்டத் தலைவர் ராமச்சந்திரன், வடக்கு மாவட்டச் செயலர் சாமு. தர்மராஜன், மக்கள் அதிகாரம் தேவா, ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த ஞானமாணிக்கம், ராஜேந்திரன், தமிழரசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.