திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த அனியாப்பூர் காட்டையம்பட்டியை சேர்ந்தவர் சதீஷ்( 34). பெரிய சமுத்திரத்தை சேர்ந்தவர் பாலா (எ) பாலசுப்ரமணியன்( 32). இவர் டிரைவர். காந்திநகரை சேர்ந்தவர் மதன்பாபு( 30). நண்பர்களான 3 பேரும், நேற்று முன்தினம் இரவு ஒரே டூவீலரில் திருச்சியில் இருந்து மணப்பாறைக்கு திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது இரவு 10.30 மணி அளவில் மணப்பாறை அருகே மறவனூரில் வந்தபோது பின்னால் திருச்சியிலிருந்து மணப்பாறை வந்த கார், டூவீலர் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சதீஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 2 பேர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மணப்பாறை போலீசார் படுகாயமடைந்த பாலா, மதன்பாபுவை சிகிச்சைக்காக மணப்பாறை தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த சதீஷ் உடலை பிரேத பரிசோதனைக்காகவும் அனுப்பினர். பின்னர் பாலா மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டார். இங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் உயிரிழந்தார். மதன்பாபு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.