Skip to content
Home » இருவருக்கு உயிர் கொடுத்த ஒன்றரை வயது குழந்தை…. நெகிழ்ச்சி சம்பவம்…

இருவருக்கு உயிர் கொடுத்த ஒன்றரை வயது குழந்தை…. நெகிழ்ச்சி சம்பவம்…

ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த தம்பதியின் ஒன்றரை வயது ஆண் குழந்தை, சில நாட்களுக்கு முன்பு வீட்டில் டிவி  வைத்திருந்த டேபிள் மீது ஏறி விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, திடீரென்று தவறி கீழே விழுந்ததில் குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததால் மேல் சிகிச்சைக்காக கடந்த 2ம் தேதி சென்னை ராஜிவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதனைதொடர்ந்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் ஒன்றரை வயது குழந்தை மூளைச்சாவு அடைந்தது. இதனை தொடர்ந்து பெற்றோரின் அனுமதியுடன் குழந்தையின் கல்லீரல் மற்றும் 2 சிறுநீரகங்கள் தானமாக பெறப்பட்டது.

கல்லீரல் மதுரையில் உள்ள  தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் 4 மாத பெண் குழந்தைக்கும், சிறுநீரகங்கள் வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் 19வயது இளம்பெண்ணிற்கும் பொருத்தப்பட்டது.  ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்த அக்குழந்தையின் உடலுக்கு சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்தஜோதி, ஆஸ்பத்திரி டீன் தேரணிராஜன், கண்காணிப்பாளர் என்.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் இரண்டரை வயது குழந்தையின் உறுப்புகள் தானம் பெறப்பட்டதே, இதுவரை மிக குறைந்த வயது உறுப்பு கொடையாளராகக் கருதப்பட்டது. தற்போது 18 மாத குழந்தையிடம் இருந்து உடல் உறுப்புகள் பெறப்பட்டுள்ளது. தமிழகத்தில் மிக குறைந்த வயது உறுப்பு கொடையாளர் பட்டியலில் ஆந்திர மாநில குழந்தை முதலிடத்தை பிடித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!