Skip to content

தஞ்சை… ஓய்வு பெற்ற கணக்காளரிடம் ரூ.14 லட்சம் மோசடி..

பங்குச்சந்தையின் மூலம் லாபம் பெற்று தருவதாக கூறி ஒய்வு பெற்ற கணக்காளரிடம் ரூ.14 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சை திருவேங்கடம்நகரை சேர்ந்தவர் 64 வயதான முதியவர். இவர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கணக்காளராக வேலை செய்து ஓய்வு பெற்றவர். இவர் கடந்த ஏப்ரல் மாதம் தனது செல்போனில் டெலிகிராம் செயலியை பயன்படுத்தினார். அதில் பிரபல நிறுவனத்தில் இருந்து பேசுவதாக மர்மநபர் ஒருவர் கூறியதுடன், பங்குச்சந்தையில் பணத்தை முதலீடு செய்வதன் மூலம் அதிக லாபம் கிடைக்கும் என குறுந்தகவல் அனுப்பினார்.
இதனையடுத்து, மர்மநபரை முதியவர் தொடர்பு கொண்டார். அப்போது மறுமுனையில் பேசிய மர்மநபர் பங்குச்சந்தையில் குறைந்த பணத்தை முதலீடு செய்து அதன் மூலம் அதிக லாபம் பெறலாம் என ஆசைவார்த்தை கூறினர்.
இதனை உண்மை என நம்பிய முதியவர், பங்குச்சந்தையில் பணத்தை முதலீடு செய்வதற்காக தனது வங்கிக்கணக்கு விவரங்களை மர்மநபரிடம் தெரிவித்தார். இதையடுத்து அந்த நபர் இலவச போனஸ் என்ற பெயரில் முதியவரின் வங்கிகணக்கில் ரூ.1000 அனுப்பியுள்ளார். இதனால் மகிழ்ச்சியடைந்த முதியவரிடம், மர்மநபர் தன்னுடைய வங்கிக்கணக்கை கூறி அதில் பணத்தை முதலீடு செய்ய நிபந்தனை விதித்தார்.
இதற்கு சம்மதித்த முதியவர் முதலில் ரூ.10 ஆயிரத்தை வங்கி கணக்கிற்கு அனுப்பிய நிலையில், அவருக்கு ரூ.18 ஆயிரத்து 550 கிடைத்தது. அடுத்ததாக மீண்டும் ரூ.14 ஆயிரத்து 161 அனுப்பிய நிலையில் அவருக்கு லாபமாக ரூ.30 ஆயிரத்து 900 கிடைத்தது. தொடர்ந்து அந்த முதியவர் பல்வேறு தவணைகளாக ரூ.14 லட்சத்து 41 ஆயிரத்து 345 ஆன்லைன் மூலம் மர்மநபரின் வங்கிகணக்கில் அனுப்பியுள்ளார். ஆனால் அவருக்கு உரிய லாபத்தொகை கிடைக்கவில்லை
இதனால் அதிர்ச்சியடைந்த முதியவர், டெலிகிராம் மூலம் சம்பந்தப்பட்ட நபரை தொடர்பு கொண்ட போது அவரது செல்போன் நீண்ட நாட்களாக சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
அப்போதுதான் தனக்கு மோசடி நடந்திருப்பதை உணர்ந்தார். இதனையடுத்து முதியவர் தஞ்சை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!