Skip to content
Home » திருச்சியில் 11,250 கிலோ ரேசன் அரிசி கடத்தல்…. 5 பேர் கைது…

திருச்சியில் 11,250 கிலோ ரேசன் அரிசி கடத்தல்…. 5 பேர் கைது…

திருச்சி தென்னூர் சவேரியார் கோவில் தெரு அருகே ரேசன் அரிசி வாகனங்களில் பதுக்கி வைத்துள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை இயக்குனர் ஆபாஷ் குமார் உத்தரவின் படி திருச்சி மண்டல குடிமை பொருள் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா அறிவுறுத்தலின்படி திருச்சி சரக டிஎஸ்பி சுதர்சன் மற்றும் திருச்சி ஆய்வாளர் கோபிநாத், உதவி ஆய்வாளர் கண்ணதாசன் மற்றும் போலீஸ் தனிப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரெய்டு நடத்திய போதுபோலீசாரை கண்டதும் தப்பியோட முயற்சித்தவர்களை வளைத்துப் பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் திருச்சி பொன்மலையை சேர்ந்த சேக் முக்தார்,தென்னூர் சவேரியார் கோவில் தெருவை சேர்ந்த மதியழகன், திருச்சி சீனிவாசன் நகரை சேர்ந்த முத்துக்குமார்,அரியமங்கலத்தை சேர்ந்த ஈஸ்வரன், அண்ணா நகரை சேர்ந்த ஆறுமுகம் என தெரியவந்தது. மேலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த நான்கு நான்கு சக்கர வாகனங்களை சோதனை செய்தபோது அதில் ரேசன் அரிசி மூட்டைகள் சுமார் 50 கிலோ எடை கொண்ட 225 மூட்டைகளில் சுமார் 11,250 கிலோ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கைது செய்தவர்களிடம் விசாரணை செய்ததில் திருச்சி தென்னுரை சேர்ந்த பாபு என்கிற சாதிக் பாட்ஷா தான் கள்ளத்தனமாக ரேசன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்பதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

மேலும் கைது செய்யப்பட்ட சவேரியார் கோவில் தெருவை சேர்ந்த மதியழகன் தனது வீட்டிற்கு எதிரே உள்ள காலி இடத்தை ரேசன் அரிசியை கள்ளத்தனமாக பதுக்கி வைப்பதற்காக வாடகை விட்டுள்ளது தெரியவந்தது. மேலும் பாபு என்கிற சாதிக் பாஷாவிடம் சேக் முத்தார் வரவு செலவு கணக்கு பார்த்ததாகவும், முத்துக்குமார் அங்குள்ள வாகனங்களை ஓட்டும் ஓட்டுநராகவும் ஈஸ்வரன், ஆறுமுகம் பொதுமக்களிடம் கிராமங்களில் குறைந்த விலைக்கு அரிசியை வாங்கி வாகனத்தில் ஏற்றி இந்த சம்பவ இடத்திற்கு வாகனத்தில் கொண்டு வந்து இங்கிருந்து நாமக்கல் கோழிப்பண்ணைகளுக்கு அதிக லாபத்திற்கு விற்பனை செய்வதாக தெரிந்தது. மேலும் இந்தவழக்கில் போலீசார் மேற்கண்ட 5 பேரையும் கைது செய்தும், கடத்தலுக்கும் பயன்படுத்தப்பட்ட வாகனங்களையும் அதிலிருந்த 11,250 கிலோ ரேசன் அரிசி மற்றும் ரொக்க பணம் ரூ 82ஆயிரத்தை கைப்பற்றி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ் வழக்கில்முக்கிய குற்றவாளியான பாபு என்கிற சாதிக் பாஷா தலைமறைவாகி உள்ளார்.அவரை தேடி கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!